சனி, 10 ஆகஸ்ட், 2013

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிக்கோவை

2009 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்கப் பாராளுமன்றத் தேர்தல்கள் (திருத்த) சட்டத்தினால் திருத்தியமைக்கப்பட்ட 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 8 (8) ஆம் பிரிவுக்கு அமைய இவ்வொழுக்க நெறிக்கோவை வெளியிடப்படுகின்றது.  தேர்தலொன்றிற்கான பெயர் குறித்த நியமன அறிவித்தல் வெளியிடப்படுகின்ற தினத்திலிருந்து தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் வரையிலான காலத்திற்கு செல்லுப்படியாகும்.  இலங்கையின் தேர்தல்கள் சட்டத்திற்கமைய அரசியல் கட்சிகள் அங்கீகரிக்கப்பட முன்னரும் கூட இந்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் காணப்பட்டனவென்பதோடு இவை தொடர்பான வரலாறு 1931 ஆம் ஆண்டு வரை நீண்டு செல்கின்றது. அரசியல் கட்சிகளை அங்கீகரித்தல் தொடர்பான சட்டம் 1959 ஆம் ஆண்டிலிருந்து பல சந்தர்ப்பங்களில் திருத்தியமøக்கப்பட்டுள்ளது. சமகால சமூகத்தின் இயக்கத்திற்கு அரசியல் கட்சிகளினால் ஆற்றப்படுகின்ற சேவைகளை அர்த்தமுள்ளவையாகவும் விளைபயன் மிக்கவையாகவும் மாற்றுவதற்கு சட்ட விதிகளினூடாக மேற்கொள்ளப்பட முடிந்த செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால் இங்கு அரசியல் கட்சிகளுக்கே பாரிய பொறுப்பு சுமத்தப்படுகின்றது.   அப்பொறுப்பையும் கருத்திலெடுத்து 2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலை நோக்காகக் கொண்டு இவ்வொழுக்க நெறிக்கோவை முதல் முதலாக தேர்தல்கள் திணைக்களத்தினால் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்காகவென பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் தேர்தல்களில் அரசியல் கட்சிகளுக்கு வெளியே வேட்பாளர்கள்  சுயேச்சைக் குழுக்களினூடாகவே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றனர். இவ்வொழுக்க நெறிக்கோவை அக் குழுக்களின் வேட்பாளர்களுக்கு பொருந்தும்.  

சட்டத்தின் ஆதிபத்தியம் :

  1    இலங்கை அரசியல் அமைப்பினாலும் ஏனைய நியதிச் சட்டங்களினாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள பிரஜைகளின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் என்பவற்றைப் பாதுகாத்து, தேர்தல் சட்டங்களுக்கமைய  மக்கள் பிரதிநிதிகளுக்கான வாக்கெடுப்போடும் மக்கள் கருத்துக் கோடலோடும் தொடர்புடைய தேர்தல்களில் வாக்காளருக்கு சுதந்திரமாகவும் எவ்வித வலுக்கட்டாயமின்றியும் தமது வாக்கினை  அளிப்பதற்கு அவகாசமளித்தலும் அதற்குத் தேவையான உதவிகளையும் வலுவாக்கங்களையுமளித்தலும். 

 2     தேர்தலொன்றில் போட்டியிட முன்வருகின்ற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்களுக்கும் தேர்தல் செயன்முறையில் உரித்தாகியுள்ள சமத்துவத்தை அனைத்து கட்டங்களிலும் பாதுகாத்தல்.

 3     அனைத்து அரசியல் கட்சிகள், வேட்பாளர்களுக்கு  உரித்தான உரிமைகளுக்கும் வாக்காளர்களை அறிவூட்டுவதற்கெனவுள்ள உரிமைக்கும் மதிப்பளிப்பதோடு எதிர்த் தரப்பினரின் உரிமைகளையும் பாதுகாத்தல்.

  4     இலங்கையின் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள அரச சார்பான , தனியார் அல்லது ஏனைய நிறுவனங்களுக்குச் சட்டத்தில் எதிர்பார்க்கப்பட்டுள்ளவாறான நடவடிக்கைகளை எடுப்பதற்கு எவ்விதத்திலும் தடங்கல்களையோ அழுத்தங்களையோ ஏற்படுத்தாமை.

  5     நாட்டின் சட்டத்தையும் சமாதானத்தையும் பாதுகாக்கின்ற நியதிச் சட்டப் பொறுப்புச் சாட்டப்பட்டுள்ள நிறுவனங்களுக்கும் அவை பொறுப்புவிக்கப்பட்டுள்ளவர்களுக்குமுரிய கடமையை ஆற்றுகையில் தடங்கல்கள் அல்லது அழுத்தங்களை ஏற்படுத்தாமை. 

6      பொது மக்களின் இயல்பான வாழ்விற்கு இடையூறு ஏற்படுத்தாமலும் நடைமுறையிலுள்ள சட்ட திட்டங்கள் மீறப்படாமலும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்தல். 

 7    அனைத்துத் தேர்தல்கள் தொடர்பாகவும் சட்டங்களில் காட்டப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் (பிரிவுகள் ) தொடர்பாக அனைத்து வேட்பாளர்களுக்கும் தெளிவை பெற்றுக் கொடுத்தலும் அச்சட்டங்களில் காட்டப்பட்டுள்ளவாறு ஊழல் செயற்பாடுகள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு அறிவுரை வழங்குதல். 

 சாதாரண நடத்தைகள் : 

1    இலங்கையர்கள் அனுஷ்டிக்கின்ற சமயங்கள், பேசும் மொழிகள், அவர்களின் இனங்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் குலகோத்திரங்கள் போன்ற  வேறுபாடுகள் தொடர்பாக வேட்பாளர்கள் , ஆட்களிடையே பகைமையுணர்ச்சி மற்றும் பொறுமையின்மை என்பவற்றை ஏற்படுத்தவல்ல அல்லது தூண்டவல்ல விதத்திலான  நடத்தைகளைத் தவிர்த்தல். 

2    அரசியல் கட்சிகள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விமர்சனங்களை , அந்தந்த கட்சிகளின் கொள்கைகள் , நிகழ்ச்சித் திட்டங்கள் , கடந்து போன நிகழ்வுகள் என்பவற்றிற்கு மட்டுப்படுத்த வேண்டுமென்பதோடு எதிர்க் கட்சியினரின் அல்லது வேட்பாளர்களின் பொது நடவடிக்கைகளோடு தொடர்புபடாத அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் அந்தரங்கங்களை விமர்சிப்பதைத் தவிர்த்துக் கொள்ளலும், நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள், திரிபுபடுத்தப்பட்ட கருத்துகளினடிப்படையில் விமர்சனங்களை மேற்கொள்ளாதிருத்தலும். 

 3    தேர்தலின் மூலம் நிறுவப்பட்ட எதிர்பார்க்கப்படுகின்ற நியதிச் சட்ட நிறுவனத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதனூடாக இலங்கையர்களின் எதிர்கால அபிவிருத்தியை அடைந்து கொள்வதற்காக வேட்பாளர்களை ஒழுக்க சீலத்துடனும் வினயமாகவும் போட்டியிட வழிகாட்டல்.


  4     வாக்களிப்பு நிலைய வளவிற்குள் அல்லது வாக்கெண்ணல் நிலைய வளவிற்குள் புகைப்பிடித்தல் அல்லது மது அந்திவிட்டு வரக் கூடாதென்றும் தவிர்ந்து கொள்ளல் இன்றியமையாததென வேட்பாளர்கள் / முகவர்கள் ஆகியோரை அறிவூட்டுதல்.  

5     வாக்கெடுப்பு நிலையம் அதன் சுற்றுச் சூழல் மற்றும் வாக்கெண்ணல் நிலையம், முடிவுகளை வெளியிடும் நிலையம் என்பவற்றினுள் அங்கீகாரமளிக்கப்பட்டுள்ள நபர்கள் மாத்திரம் உட்பிரவேசித்தல். 

 6    தேர்தலுடன் தொடர்புடைய  தடுக்கப்பட்ட செயற்பாடுகளில் ஈடுபடுதல் அல்லது தமது ஆதரவாளர்களை அப்பணிகளில் ஈடுபட ஆதரவு தெரிவித்தல் மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும்   நடவடிக்கைகளில் ஈடுபடுதல்.    


தேர்தல் பிரசார நடவடிக்கைகள் :  

1    தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்வந்துள்ள அரசியல் கட்சிகள் , சுயேச்சைக் குழுக்கள் என்பன தேர்தல் சட்டத்தில் காட்டப்பட்டுள்ளவாறு  தேர்தல் பிரசார நடவடிக்கைகளை சட்ட ரீதியாகவும் சட்டம், அமைதி என்பன பேணப்பட்ட நிலையிலும் மேற்கொள்ளல் , எதிர்த் தரப்பினர்களின் சட்ட ரீதியான தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்காமை மற்றும் சட்டத்திற்குட்பட்டவாறு தேர்தல் பிரசார அலுவலகங்களைப் பேணுதல்.


  2     வாக்காளர்களை அறிவூட்டத்தக்க ஆவணங்களை அச்சிடல் மற்றும்   பகிர்ந்தளித்தல் தொடர்பாக தேர்தல் சட்டத்துக்கு அமைய நடந்து கொள்ளல்.  

3     தமது கட்சியின் அல்லது சுயேச்சைக் குழுவின் அல்லது வேட்பாளர்களின் வெற்றியை இலக்காகக் கொண்டு அல்லது வேறொரு தரப்பினரின் தோல்வியை எதிர்பார்த்து எந்தவொரு தேர்தல்  பிரசார அறிவித்தலையோ  அல்லது அதனோடு தொடர்புடைய புகைப்படத்தையோ அரசாங்க அல்லது தனியார் துறைக்குச் சொந்தமான கட்டிடமொன்றில் காணியொன்றில் அல்லது பொது மக்கள் பிரவேசிப்பதற்கென அனுமதிக்கப்பட்டுள்ள பாதைகளில் அல்லது பொது இடங்களில் காட்சிப்படுத்துவதைத் தவிர்த்தல்.

 4    தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக அரசாங்கம்  அல்லது அரச சார்பான நிறுவனங்களுக்குரித்தான காணிகள், கட்டிடங்கள், ஆதனங்கள் அல்லது சேவைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல்.  

5    தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக எந்தவொரு சமயத் தலத்தையோ , சமயத் தலமொன்றுக்குரித்தான காணி ஆதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளல். 

 6     வேட்பாளர்  பிரயாணம் செய்கின்ற வாகனத்தில் மாத்திரம் தேர்தலோடு தொடர்புடைய கொடிகள், அறிவித்தல்கள் மற்றும் வேட்பாளரின் இலக்கத்தைக் காட்சிப்படுத்தல். 

 7    தேர்தல் பிரசாரத்திற்காக மேற்கொள்ளப்படுகின்ற சோடனைகள், அனுமதியளிக்கப்பட்டுள்ள தேர்தல் பிரசாரக் கூட்டம் இடம்பெறுகின்ற காணியில் அக் காலப் பகுதிக்குள் மாத்திரம் சூழலை மாசுபடுத்தாதவாறு மேற்கொள்ளலும் அத்தகைய கூட்ட நடவடிக்கைகளின் பின்னர்  தாமதமின்றி அச்சோடனைகளை அகற்ற நடவடிக்கையெடுத்தலும். 

 8     தேர்தல் காலக்கெடுவினுள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்குரிய மக்கள் ஊர்வலங்களை , வாகன ஊர்வலங்களை நடத்துதல், தேர்தல் சட்டங்களை மீறும் செயலென்பதால் அவ்வாறான ஊர்வலங்கள் எதையும் தேர்தல் காலக்கெடுவினுள் நடத்தாதிருத்தல். 

 9     கூட்டத்திற்காக அனுமதிபெறப்பட்ட ஒலி பெருக்கியைப் பயன்படுத்துதல் , கூட்டக்  காலத்திற்கும் அக்காணிக்கும் மாத்திரம் மட்டுப்படுத்தப்படல் . வாகனம்  செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் போது ஒலி பெருக்கியூடாக பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதைத் தவிர்த்தல். 

 10     தேர்தல் தினத்தன்று வாக்கெடுப்பு ஆரம்பிப்பதற்கு 48 மணித்தியாலத்துக்கு முன்னர் உரிய தேர்தல் சட்டத்திற்கு அமைய தேர்தல் பிரசாரங்களை நிறுத்த நடவடிக்கையெடுத்தல் மற்றும் அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாண்மையை ஊக்குவிக்கக் கூடியதாக இசை நிகழ்ச்சியை நடத்துதல். அச்சு/ இலத்திரனியல் ஊடகங்களூடாகப் பிரசாரம் செய்தல் போன்ற பணிகளை நிறுத்துதல்.   

11     எந்தவொரு கட்சியையும் அல்லது சுயேச்சைக் குழுவையும் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தில்  மாகாண சபையொன்றில் அல்லது உள்ளூர் அதிகார சபையொன்றின் பொது மக்கள்  பிரதித்தியொருவராகப் பதவிவகிக்கின்றவர் ஏதேனுமொரு  கட்கட்சியை தனக்கு பிரதிநிதியொருவர் என்ற வகையில் கிடைக்கப்பெற்றுள்ள வரப்பிரசாதங்களையும் தத்துவங்களையும் வாகனங்களையும் ஏனைய அரசாங்க  வளங்களையும் பயன்படுத்தாமை.  

12     பொது மக்கள் பிரதிநிதியொருவரின் பாதுகாப்புக்காக சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புத் துறை உத்தியோகத்தர்கள் அல்லது அவர்களின் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ள சுடுகலன்கள், ஏனைய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கருவிகள் என்பவற்றை குறித்த மக்கள் பிரதிநிதியின் பாதுகாப்புக்காகவன்றி வேறெந்தவொரு சட்ட ரீதியற்ற நடவடிக்கையிலும் ஈடுபடுத்துவதைத் தவிர்த்தல்.  

13     ஏதேனுமொரு தேர்தல் சட்டத்திற்கமைய இலங்கை ரூபவாஹினிக்  கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினூடாகப் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகளுக்கும், சுயேச்சைக் குழுக்களுக்கும் தேர்தல் சட்டத்தின் கீழ் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வழங்கப்படுகின்ற வானலைக் கால எல்லை, உரிய  கூட்டுத்தாபனத் தலைவர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் ஆகியோரால் வெளியிடப்படுகின்ற அறிவுறுத்தல்கள் மற்றும் நிபந்தனைகளுக்கமையப் பயன்படுத்தப்படல். (மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பொருந்தாது) 

 14     ஏதேனுமொரு தேர்தல் சட்டத்துக்கமைய தேர்தலொன்றின் போது வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள் , சுயேச்சைக் குழுக்கள் செய்தியொன்றை  அனுப்புவதற்குள்ள உரிமையை, உரிய சட்டத்தின் ஏற்ப நாடுகள் மற்றும் அஞ்சல் மா அதிபரினால் (விதிக்கப்படுகின்ற நிபந்தனைகள் என்பவற்றுக்கமையப் பயன்படுத்துதல். (இவ் வாய்ப்பு மாகாண சபை மற்றும் உ ள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்குப் பொருந்தாது) 

 15     க.பொ.த. சாதாரண தரம் அல்லது உயர் தரப் பரீட்சைகள் மற்றும் 5 ஆம்  ஆண்டுப் புலமைப் பரீட்சை உட்பட ஏனைய பிரபல்ய பரீட்சைகள் இடம்பெறும் பாடசாலைகள் (பரீட்சை நிலையங்கள் ) மற்றும் அப்பரீட்சையின் விடைத் தாள்கள் மதிப்பீடு செய்யும் (பாடசாலைகளின்  பரீட்சை நிலையங்கள்) அந் நடவடிக்கைகளுக்கு இடையூறு  விளைவிக்கும் விதத்தில் அப்பாடசாலைகளின் சுற்றுப்புறத்தில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து தவிர்ந்திருத்தல்.  

வாக்கெடுப்புத் தினம்:  

1    தேர்தல்  தினத்தன்று வாக்கெடுப்பு நிலையத்திலிருந்து 500 மீற்றர் தூரத்திற்குள் வாக்குகளை இரந்து கேட்டல், வாக்காளர்களை வாக்களிக்க அல்லது வாக்களிக்காதிருக்கத் தூண்டல் , தேர்தல் துண்டுப் பிரசுரங்கள் போன்றவற்றைப் பகிர்ந்தளித்தல் போன்ற எந்தவொரு  நடவடிக்கையையோ அல்லது தேர்தல்கள் சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களையோ இழைக்காமை. 


 2     வாக்களிப்புக்காக வாக்கெடுப்பு நிலையத்திற்கு வருகை தருகின்ற  வாக்காளர்களுக்கு மற்றும் வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்கினைப் பிரயோகிக்கின்ற வாக்காளர்களுக்கு எவ்வித இடைஞ்சலும் ஏற்படுத்தாமையும் வாக்கினைப் பிரயோகிப்பதற்கான அழுத்தங்களை ஏற்படுத்தாமையும் வாக்காளர்களுக்கு தமது வாக்கினை சுதந்திரமாகவும் அந்தரங்கமாகவும் , பிரயோகிப்பதற்குள்ள உரிமைக்குப் பங்கம் ஏற்படுத்தாமையும். 

 3    தேர்தல் தினத்தன்று  வாக்காளர்கள் , வாக்கெடுப்பு  நிலைய முகவர்கள் , வேட்பாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தினர்கள் ஆகியோர் எந்தவோர்  அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கப்படுதல், உடல் ரீதியான சித்திரவதைகளுக்கு இலக்காக்கப்படுதல் அல்லது அவர்களின் ஆதனங்களுக்கு சேதம் விளைவித்தல் என்பவற்றைத் தவிர்த்துக் கொள்ளல் மற்றும் வாக்கெடுப்பு  நிலையத்திலிருந்து துரத்துதல். 

 4    வாக்கெடுப்புத் தினத்தன்று வாக்கெடுப்பு  நிலையத்திற்குள் உட்பிரவேசிப்பதற்காக அனுமதியுள்ளவர்கள் மாத்திரம்  (போட்டியிடுகின்ற அரசியல் கட்சியொன்றின் செயலாளர் , வேட்பாளர்கள் மற்றும் வாக்கெடுப்பு நிலைய முகவர்கள் ) தத்தமது ஆளடையாளத்தை நிரூபித்து உட்பிரவேசிக்க வேண்டியுள்ளமையால் அது தொடர்பாக ஒத்துழைப்பு வழங்கல். 

 5     தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எத்தகைய குற்றத்தையும் தேர்தல் ஊழல் நடவடிக்கைகளையும் ஆற்றுவதைத் தவிர்த்துக் கொள்ளல் (வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்குப் பெட்டிகளை வலுக்கட்டாயமாக நிரப்பல், வாக்கெடுப்பு நிலையத்திற்குள் அத்துமீறிப் பிரவேசித்தல், ஆள்மாறாட்ட வாக்குகளைப் போடல்  போன்ற தவறான ஊழல் நடவடிக்கைகள்)  

6    சட்ட ரீதியற்ற முறையில் வாக்கெடுப்பு  நிலையத்திற்கு வாக்காளர்கள்  போக்குவரத்துச் செய்யாமலிருக்க வழிவகை செய்தல். 

 7     வாக்கெடுப்பை நடத்துவதற்காக அந்நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகவுள்ள பணியாட் குழுவுக்கு எதிர்பார்க்கப்பட்டவாறு ஒத்துழைத்தலும் அவர்களின் பணிகளுக்கு முகவர்கள் இடையூறு ஏற்படுத்தாமைக்கு வழி வகை செய்தலும்.  

8    தேர்தல்கள் ஆணையாளரின் அங்கீகாரத்தோடு வாக்கெடுப்பு  நடவடிக்கைகளைக் கண்காணிக்கின்ற முகவர்களுக்கு கண்காணிப்பு  நிறுவனங்களின் முகவர்களுக்கு தடங்கலேற்படுத்தாமையும் அவர்களின் பணிகளை ஆற்றுவதில் ஒத்துழைப்பு வழங்கலும். மேற்குறித்த விடயங்கள் ஏற்புடைத்தாகின்றவிடத்து அஞ்சல் வாக்குகள் அடையாளமிடப்படும் தினத்திற்கும் செல்லுபடியாகுமெனக் கருதுதல் பொருத்தமாகும்.  

வாக்குகள் மற்றும் விருப்புகளை எண்ணல் (அஞ்சல் வாக்குகள்  உள்ளிட்ட) மற்றும் பெறுபேறுகளை வெளியிடுதல் ; 

 1    வாக்குகள் மற்றும் விருப்புக்களை எண்ணல் (அஞ்சல் வாக்கெண்ணல் உள்ளிட்ட) நடைமுறை தொடர்பாக தமது வாக்கெண்ணல் முகவர்களை அறிவூட்டலும் முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும்  உரிய முறைமை தொடர்பாக தம் முகவர்களை  அறிவட்டலும்.  

2     தெரிவத்தாட்சி அலுவலர் வாக்கெண்ணல் நிலையத்திற்குள்ளேயும் பெறுபேறுகள் தயாரிக்கப்படும் நிலையத்திற்குள்ளேயும் அந் நடவடிக்கைகளை நிர்வகித்தல் தொடர்பாக  விதிக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கமைய நடவடிக்கையெடுத்தல் இன்றியமையாததென தத்தம் முகவர்களை அறிவூட்டல்.  

3    வாக்கெண்ணல் அலுவலர்களாக முறையாக நியமனஞ் செய்யப்படாவிடின் அரசாங்கத்தின் அல்லது மாகாண சபைகளின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் சபை உறுப்பினர்கள், அல்லது ஏனைய அரசியல் அதிகாரிகள் வாக்கெண்ணல் நிலையக் கட்டிடத் தொகுதிக்குள் / நிலையத்திற்குள்  உட்பிரவேசிக்காதிருக்க வழி  வகை செய்தல். 

ஏனைய  முக்கிய விடயங்கள் :

  1    தேர்தலில் போட்டியிடுகின்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தத்தம் கட்சிகளின் கோட்பாட்டையும் ஒரு குறித்த காலப் பகுதிக்குள் தமது கட்சியால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலைத் திட்டமொன்றையும் வாக்காளர்களுக்கு முன்வைத்தல்.

  2    தேர்தல்  பிரசார நடவடிக்கைகளில் அரசாங்க  உடைமைகள், உத்தியோக பூர்வ வாகனங்கள் அல்லது அலுவலர்களை ஈடுபடுத்தாமை.  

3    மக்கள் பிரதிநிதிகள் தமது உத்தியோக பூர்வ கடமை நடவடிக்கைகளூடாக தேர்தல் பிரசாரங்களை  மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளல். 

4     தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக கட்டணமின்றி அரசாங்க வான் ஊர்திகளையோ அல்லது வேறு வாகனங்களையோ பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளல்.

 5     தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பொதுக் கட்டிடங்கள், விளையாட்டு மைதானங்கள்,  அரசாங்க சுற்றுலா விடுதிகள் என்பன பயன்படுத்தப்படுமாயின் உரிய கொடுப்பனவுகளை வழங்கி அவற்றைப் பயன்படுத்தலும் அத்தகைய வளங்களை அதேமுறையில் அனைத்து தேவையான தரப்பினராலும் பெற்றுக் கொள்ளத்தக்கவாறு நடவடிக்கையெடுத்தலும். 

6     தேர்தல் காலத்தில் அரசியல்   செய்திகளையும் கடிதங்களையும் அரசாங்கத்தின் அல்லது அரச நிறுவனங்களின் செலவில் பிரசுரிக்காமை.  


7     தேர்தல் காலக்கெடுவிற்குள் வாக்காளர்களை அரச அலுவலர்கள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தமது தனிப்பட்ட அல்லது  உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு அழைத்து   உபசரிப்பதைத் தவிர்த்துக் கொள்ளல்.  

8     ஏதேனுமொருவிதத்தில் நிதி ஏற்பாடுகளை வழங்கல் அல்லது வாக்குறுதிகளையளித்தல், கருத்திட்டங்கள் அல்லது திட்டங்கள் என்பவற்றிற்காக அடிக்கல் நாட்டல், பாதைகள் , நீர்  , மின்சாரம்  ஆகிய வசதிகளை வழங்கல் தொடர்பான வாக்குறுதிகளையளித்தல் மற்றும் தமது கட்சிக்கு அனுகூலம் ஏற்படுத்தத்தக்கவாறு வாக்காளர்களுக்காக முறையற்ற விதத்தில் மிகத் துரிதகதியில் அரசாங்கத்துறையின் பதவிகள் மற்றும் நியமனங்கள் என்பவற்றை வழங்குவதைத் தவிர்த்தல். 

 9     தேர்தல் சட்ட மீறல்கள், தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தல், தேர்தல் மோசடிகள் மற்றும் குற்றங்கள் தொடர்பான சட்டங்களை அமுல்படுத்துகின்ற துறைகளினால்  மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளில் தலையிடாமையும் அத்துறைகளுக்கு  சுயாதீனமாக நடந்து கொள்ளத் தேவையான பின்னணியை உருவாக்கலும்.  

 10     தேர்தல் காலப்  பகுதிக்குள் எதிர்த்தரப்பினர்களுக்கும் அவற்றின் ஆதரவாளர்களுக்கும் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களினூடாக தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து உரிய தரப்பினருக்கு அவற்றுக்கு பதிலளிப்பதற்கான சந்தர்ப்பத்தைக் கூட வழங்காமல் பிரசாரம் செய்வதற்காக ஊடகங்களைப் பயன்படுத்தாமை.  

11     அரசியல்   கட்சி அல்லது அரசியல்வாதிகள் தொடர்பாக செய்யப்படுகின்ற விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிப்பதற்கு வன்முறைத் தன்மையற்ற சட்ட ரீதியான செயற்பாடுகளை மாத்திரம் பின்பற்றல்.  

12    மக்கள்  பிரதிநிதிகளின்  சட்ட ரீதியான மெய்ப் பாதுகாவலர்களாகக் கடமையாற்றுகின்ற பொலிஸார் மற்றும் ஏனைய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உத்தியோகப்பற்றற்ற விதத்தில் அரசியல் , தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் எதிர்க் கட்சியினரின் தேர்தல் செயன்முறைகளைச் செயலிழக்கச் செய்வதையும் தவிர்த்துக் கொள்ளல்.  

13     எந்தவோர் அரசியல் கட்சியோ அல்லது அரசியல் அமைப்போ தமது தேர்தல் நடவடிக்கைகளில் சட்ட ரீதியற்ற விதத்தில் ஆயுதந்தாங்கிய நபர்களை ஈடுபடுத்த நடவடிக்கைகள் எடுக்குமாயின் அத்தகைய செயற்பாடுகளைப் பகிரங்கமாகக் கண்டிப்பதும் அவற்றைத் தடுப்பதற்காக உரிய தரப்பினருக்கு அறிவித்தல்.  

14    தேர்தல் நடத்தப்படுகின்ற ஒரு பிரதேசத்தில் அரசாங்கத்தினால் அல்லது அரசாங்கத்தின் ஆதரவில் களியாட்டங்கள் , கண்காட்சிகள் மற்றும்  பொருட்காட்சிகள்  என்பன நடத்தப்படுமாயின் அச்சந்தர்ப்பங்களை தேர்தலில் போட்டியிடவுள்ள  வேட்பாளர்களினதும் கட்சிகளினதும் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கோ அல்லது தேர்தல் பிரசாரங்களோடு தொடர்புபடுத்துவதற்கோ நடவடிக்கையெடுக்காமை. தேர்தலில் போட்டியிடுகின்ற  அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும்  மற்றும் சுயேச்சைக் குழுத் தலைவர்களும் தமது வேட்பாளர்களை இவ் விடயங்கள்   தொடர்பாக அறிவூட்டுவரென எதிர்பார்க்கப்படுவதோடு இவ் வொழுக்க நெறிக்கோவையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் அவர்களால் செயலுருப்படுத்தப்படுகின்றமை  தொடர்பாக கட்சித் தலைவர்கள் மற்றும் சுயேச்சைக் குழுத் தலைவர்கள் திருப்தியடையக் கூடிய வேலைத் திட்டமொன்று அமுல் செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.  இவை 2013 செம்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலின் போது அனைத்து அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடாத அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கும் வெளியிடப்படுகின்றன. 

 மகிந்த தேசப் பிரிய  தேர்தல்கள் ஆணையாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக