செவ்வாய், 20 ஜூலை, 2010

பணமும்... மனித மனமும்...

பண விஷயத்தில் ஒவ்வொருவரின் மனநிலையும், அணுகுமுறையும் ஒவ்வொரு விதமாக தான் உள்ளது. பணத்தை சிலர் பெரிய விஷயமாய் பார்க்கிறார்கள். சிலர் மிக மிக அற்பமாய் பார்க்கிறார்கள். இன்னும் சிலரோ பெரிதாகவும் நினைப்பதில்லை. அற்பமாகவும் பார்ப்பதில்லை. பணத்தை ஒருவர் எவ்விதமாக உபயோகப்படுத்துகிறாரோ - அதற்கும் அவரின் வாழ்வின் ஏனைய வளர்ச்சிக்கும் மிகப் பெரிய சம்பந்தம் இருப்பதாகவே கருதுகிறேன்.



பணத்தை அலட்சியமாக கையாள்பவர்களை - பணமும் அலட்சியமாக பார்ப்பதாகவே நினைக்கிறேன். பணமும் அவரிடம் இருக்க விரும்புவதில்லை. பணத்திற்கும் நுகரும் சக்தி உள்ளதோ. அதனால் தான் பணத்தை மதிப்பவர்களிடத்தில் தான் பணம் இருக்க விரும்புகிறதோ. நிறைய சம்பாதிப்பவரை காட்டிலும், பணத்தை மதிப்பவரிடம் நிறைய பணம்
இருக்கும்.

பதிவர் சந்தனமுல்லை அவர்களின், "காசு மேல காசு வந்து" எனும் பதிவே - இப்பதிவெழுத காரணம்.

பணம் குறித்த எனது அனுபவம், பணத்தை தேடிய அனுபவம், பணத்தோடு வாழ்ந்த அனுபவம் என்று ஒரு பகிர்வு -இந்த பதிவில். யாரால் இந்த விஷயம் எனக்கு போதிக்கப்பட்டது என்று தெரியாது. சிறு வயது முதலே நான் பணத்தை சிக்கனமாகவே செலவு பண்ணுவேன். இயல்பாகவே சேமிக்கும் பழக்கமும் எனக்குநிறைய உண்டு.

நான் ஏழாவது வகுப்பு படிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்தே எனக்கு பாக்கெட் மணி கொடுப்பார் அப்பா. பஸ்ஸில் தான் ஸ்கூலுக்கு போவேன். பஸ் காசு போக மிச்ச காசு எனக்கு பாக்கெட் மணி. ஒரு ரூபாய் தேறும். ஸ்கூலுக்கு எதிரே விற்கப்படும் மாங்காய், மிட்டாய் மற்றும் ஜிகர் தண்டா சாப்பிட்டது போக மிச்சக் காசை சேர்த்து வைப்பேன். பஸ்ஸில் கூட்டம் இருந்தால் டிக்கட் எடுக்க மாட்டேன். அந்த காசை சேர்த்து வைப்பேன். மேலும் பஸ் காசை மிச்சம் பண்ண, பஸ்ஸில் செல்லாமல் - வீட்டிற்கு நடந்து செல்வோம்- நண்பர்களுடன். நடந்து வந்த விஷயம் தெரிந்தால் அப்பா திட்டுவார்.

எனது பதினைந்தாவது வயது பிறந்த நாளுக்கு - நான் சிறுக சிறுக சேர்த்து வைத்த காசில், முதல் முதலாக ஒரு டி-சர்ட் வாங்கினேன். பிறகு அது வழக்கமானது. பெரும்பாலும் டி-சர்ட் தான் வாங்குவேன். அப்பா டி-சர்ட் வாங்கி தர மாட்டார். "ரௌடி பய மாதிரி இருக்கு" என்று.

எங்கள் வீட்டில் மொத்தம் நான்கு பசங்க. அப்பா எல்லோருக்கும் பாக்கெட் மணி தருவார். அண்ணனை தவிர நானும் மற்ற இரு சகோதரிகளும் சிக்கனமானவர்கள். எங்களது சேமிப்பில் வந்த காசை வைத்து தான், எங்கள் வீட்டில் முதல் முதலாக இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள கருப்பு வெள்ளை டிவி வாங்கினோம். பிறகு இதே மாதிரி சேமித்து ஒரு தையல் மிஷின் வாங்கினோம். பிறகு சகோதரிகளுக்கு திருமணமானது.

சுயமாய் சம்பாதிக்க துவங்கிய பிறகு, நிச்சயம் நமக்கு தலைகால் புரியாது. அதீதமாய் செலவு செய்ய மனம் விரும்பலாம். ஏனோ எனக்கு அப்படி தோன்றவில்லை. திடீரென்று அப்பாவின் வருமானம் இல்லாமல் போனது - ஒரு காரணமாக இருக்கலாம். குடும்பத்தை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பும் நம் தலையில் விழுந்தது. எந்த வித அனாவசிய செலவு செய்யாமலே வரவுக்கும், செலவுக்கும் சரியாக இருக்கும்.

மெல்ல மெல்ல வாழ்க்கையில் வளர்ச்சி துவங்கியது. எனக்கு சிறு வயது தொடக்கத்தில் இருந்தே நண்பர்கள் மிக மிகக் குறைவு. இப்போதும் தான். நண்பர்களுடன் சுற்றும் வாய்ப்பும் குறைவு. அதனால் செலவு கட்டுக்குள் இருந்தது. எவ்வளவு சம்பாதித்தாலும் பள்ளி நாளில் என் தனிப்பட்ட செலவு என்று எவ்வளவு இருந்தோ - அந்த அளவு தான்- இப்போதும் செலவு இருந்தது. என்ன... மாங்காய், மிட்டாய்க்கு பதிலாக டீ குடிப்பேன். அவ்வளவு தான்.

ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி, அம்மாவிடம் குடும்ப செலவுக்கு பணம் கொடுத்து விடுவேன். "இதுக்குள்ள தான் செலவு பண்ணனும்" என்பேன். அம்மா சிரித்து கொண்டே,"அம்மா கிட்டயே கறரா இருக்க" என்பார்கள். "அம்மா நா இப்ப சம்பாதிக்கிறது எல்லாம் இன்னிக்கே செலவு பண்ணுவதற்கு இல்ல... இனி இருபது இருபத்தி அஞ்சு வருஷத்துக்கும் சேர்த்து. BUSINESS பண்றேன். திடீர்ன்னு தொழில்ல தொய்வு ஏற்பட்டா என்ன பண்றது" என்பேன்.

சில நேரம் தோன்றும. "எதிர்காலம்.... எதிர்காலம்..." என்று பேசி, பேசி நிகழ் கால சந்தோஷங்களை தொலைத்து கொண்டிருக்கிறோமோ என்று. ஒரு வினாடி தான் அந்த எண்ணம் இருக்கும். பிறகு ஓடி மறைந்து விடும். இப்போதும் நான் சந்தோஷமாக தான் இருக்கிறேன். தேவைகளுக்காக பணம் செலவழிப்பது வேறு. பர்ஸ் நிறைய பணம் இருக்கிறதே என்று செலவு பண்ணுவது வேறு.

நண்பர் சொன்னார். "நேத்து நாலாயிரம் ரூபாய் எடுத்துட்டு வெளிய போனேன். கடைசில வண்டிக்கு பெட்ரோல் போட காசு இல்ல"... இன்று நுகர்வோரின் சிந்தனையை மழுங்கடிக்கும் வண்ணம் சந்தையில் பொருட்கள் குவிந்துள்ளன. எது தேவை, எது தேவை இல்லை என்று யோசிக்க முடியாத வண்ணம் மூளையை செயல் இழக்க வைக்கிறது- அந்த பொருட்களின் வனப்பு.

தேவையை உணர்ந்து நாம் பொருள் வாங்க பழக வேண்டும். இன்றைய சூழலில் பணத்தை சேமிக்க தனி பயிற்சி தான் எடுக்க வேண்டும்...

பண விஷயத்தில், குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் திருப்தி படுத்துதல் என்பது இயலாத காரியம். ஆளாளுக்கு ஆசைகள் இருக்கும். மேலும், ஒரு குடும்பத்தில் பணம் சம்பாதிப்பவரே, நிதி மந்திரியாக இருப்பது நல்லது அல்லது இருபாலரில் யாருக்கு பணத்தின் மதிப்பு தெரிகிறதோ - அவர் நிதி மந்திரியாக இருத்தல் நலம். வருமானத்துக்குள் செலவு பண்ண வேண்டிய தேவையை அவர் அறிவார். செலவை கூட்டவும், குறைக்கவும் முடியும்.


நிறைய சம்பாதிக்கின்ற சிலர், குறைவாசம்பாதிக்கின்றவர்களை ஏளனமாக பார்ப்பார்கள். நிச்சயம் அது தேவையற்ற ஒன்று. நிறைய பணம் சம்பாதிப்பது என்பது, அங்கங்கே வெகு சிலருக்கே கிடைக்கக்கூடிய வாய்ப்பு. நாம் ஈடுபடுகிற தொழிலால் கிடைக்கிற வாய்ப்பாகவும் இருக்கலாம். ஒரு திரைப்படத்திற்கு பத்து கோடி ரூபாய் ஒருவர் வாங்குகிறார் என்றால் அது அந்த தொழில் தரும் வாய்ப்பு. அவ்வளவே. அதே நபர் வேறு தொழில் பார்த்தாரேயானால், அதே பத்து கோடியை சம்பாதிப்பார் என்று சொல்ல முடியுமா.

ஒரு பக்கம் பணம் சம்பாதித்தல் மிக மிக சுலபமாக உள்ளது. மறு பக்கம், அதுவே எவ்வளவு கடினமானதாகவும், துயரமிக்கதாகவும் உள்ளது. இருப்பவர்கள் - இல்லாதவர்களின் நிலையையும், இல்லாததால் ஏற்படும்
கஷ்டத்தையும் உணர்ந்தால் - பல விஷயங்கள் பிடிபடலாம். பணம் குறித்த எனது அனுபவம் இவ்வாறாக தான் உள்ளது.

கடவுளுக்கு மாடு எழுதும் கடிதம்

வணக்கம் தெய்வமே.


நலமாக இருக்கின்றீர்களா என்று கேட்க விரும்பவில்லை. நீங்கள் நலமாகவே இருப்பீர்கள். நீண்ட நாட்களாகவே உங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்தது ஆனாலும் எழுதுவதற்கு மனம் வருவதில்லை. எங்களை மாடு என்று சொல்லிக்கொண்டு எங்களையும் விட மோசமான நிலையிலே மனிதானமற்று செயற்படுகின்ற இந்த மனிதர்களின் போக்கைப் பார்க்கின்றபோது எப்படியோ இன்று கடிதம் எழுதவேண்டும் என்று தோன்றியது.

அப்படி கடிதம் எழுத வேண்டும் என்ற அவசியம் ஏன் ஏற்பட்டது என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. நீண்ட காலமாகவே எனக்கு இருந்த ஒரு சந்தேகத்தை உங்களிடம் முதலில் கேட்கின்றேன். உலகத்தைப் படைத்து, உயிர்களை எல்லாம் படைத்து இந்த உலகத்தையே நீங்கள்தான் இயக்கிக் கொண்டிருப்பதாக சொல்கின்றனர். இது உண்மையா? அப்படியானால் எங்களுக்கு 5 அறிவு படித்துவிட்டு மனிதனுக்கு மட்டும் ஏன் 6 அறிவு படைத்தீர்கள்.

இன்றைய மனிதன் ஆறறிவோடுதான் இருக்கின்றானா என்பது சந்தேகமாகவே இருக்கின்றது. 5 அறிவு படைத்த நாங்கள் நடந்து கொள்ளும் அளவுக்கு மனிதன் நடந்து கொள்கின்றானா? எங்களைப் பார்த்து மாடு என்று சொல்லிவிட்டு எங்களைவிட கீழ் தரமான முறையிலே நடந்துகொள்ளும் மனிதர்களைப் பார்த்து வெட்கித் தலை குனிகின்றோம்.

சில மனிதர்களுக்கு மாடு, மாடு என்று ஏசுகின்றனர். அவர்கள் நடக்கின்ற விதங்களைப் பார்க்கின்றபோது. அடிக்கடி நான் கவலைப் படுவதுண்டு. அந்த மனிதன் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்த்து அழுதிருக்கின்றேன். மாடு என்று எங்கள் பெயரை வைத்து கேவலமான நடவடிக்கைகளிலே ஈடுபட்டு எங்கள் பெயரையே கேவலப்படுத்தும்போது எமது சந்ததிக்கே ஒரு அவமானமாக கருதுகின்றேன்.

இந்த மனிதன் எத்தனையோ அட்டுழியங்களையும், அடாவடிகளையும் செய்துகொண்டிருக்கின்றான் எங்களையும் இவன் விட்டு வைத்ததாக இல்லை. எங்களை எப்படி எல்லாம் கொடுமைப் படுத்தவேண்டுமோ அப்படி எல்லாம் கொடுமைப் படுத்துகின்றான்.

ஏன் கதையும் ஒரு சோகக் கதைதான். நான் இப்போது ஒரு விவசாயியிடம் இருக்கின்றேன். என்னை சிறுவயதிலே வேறு ஒரு இடத்திலிருந்து வாங்கி வளர்த்தார். சிறு வயதில் நல்ல உணவு கிடைத்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை இப்போது அந்த விவசாயிக்கு தினமும் அதிகளவில் உழைத்துக் கொடுக்கின்ற ஒருத்தனாக மாறிவிட்டேன். ஆனால் நான் உழைத்துக் கொடுக்கும் அளவுக்கு எனக்கு உணவு வழங்கப் படுவதில்லை.

செய்வதறியாது தினமும் அழுதுகொண்டிருக்கின்றேன். காலையில் 5 மணிக்கு எங்காவது உழுவதற்கு கொண்டு செல்வார். காலையில் சாப்பாடு கிடைக்காது நெல் விதைக்கும் காலங்களில் காலையில் போனால் மாலையில்தான் வரவேண்டும் அதுவரைக்கும் தொடர்ந்து வேலை செய்யவேண்டும். உணவு கிடைக்காது. இரவில் வைக்கோல் தருவார்கள்.

பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு இந்த வைக்கோலை சாப்பிட்டு நான் என்ன செய்வது. நான் உழைத்துக் கொடுக்கும் பணத்தை வைத்து அந்த மனிதர் விதம் விதமான சாப்பாடு சாப்பிடுகின்றார். எங்களுக்கு ஒரு நேர சாப்பாடும் ஒழுங்காக இல்லை.

இந்த நிலை எனக்கு மட்டுமல்ல ஏன் சந்ததிக்கே, என் இனத்துக்கே நடக்கின்றது. பசியின் காரணமாக நாங்கள் வேலயு செய்யமுடியாது களைப்பின் காரணமாக சற்று நேரம் படுத்தாலே எத்தனையோ சித்திரைவதை செய்கின்றனர். எங்கள் முக்குக்குள் கம்பினால், கம்பியால் குத்தி காயம் எடுத்து மிளகாய் பொடி போடுகின்றனர். அப்போது நான் மிளகாய்ப்பொடி எரிகின்றபோது வேலை செய்வேனாம். இன்னும் எத்தனையோ சொல்ல முடியாத சித்திரைவதைகள்.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் ஆனால் இன்னும் எழுத நேரம் போதவில்லை இன்று முழுவது கடும் வேலை இப்போதுதான் வைக்கோலை சாப்பிட்டுவிட்டு வந்து எழுதுகின்றேன். உடம்பு கடும் வலியாக இருக்கின்றது. இன்று சற்று களைப்பாக இருந்ததனால் வேகமாக வேலை செய்யும்படி அதிகமாக அடித்துவிட்டார்கள் இப்போது சற்று தூங்க வேண்டும்.

இறுதியாக உங்களிடம் ஒன்றை மட்டும் கேட்கின்றேன். மனிதர்களையும் எங்களையும் நீங்கள்தானா படைத்தீர்கள். உங்கள் படைப்பிலும் வேற்றுமைகளா? உங்களால் படைக்கப்பட்ட எங்களை உங்களாலேயே படைக்கப்பட்ட இன்னொரு படைப்பு மனிதன் எனும் மிருகம் எங்களை சித்திரைவதை செய்யும்போது ஏன் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள்.

நான் நினைக்கின்றேன். இப்போது மனிதர்களை அறிவில்லாமல் படைக்கின்றீர்கள் என்று. உங்களால் படைக்கப்பட்ட மனிதனை உங்களால் மாற்ற முடியாதா? மனிதன் மனங்களிலே மாற்றம் வரவேண்டும். மனிதனது மனங்களிலே உங்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாதா?

நீங்கள் இந்த உலகத்தில் நடப்பவற்றை பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றீர்களா? அல்லது இந்த மனிதர்களின் அட்டுழியங்களுக்கு பயந்து நீங்களும் எங்காவது ஓடிவிட்டீர்களா?

தவறிருந்தால் மன்னியுங்கள்.

இப்படிக்கு
உன் படைப்பால் வேதனைப்படும்
மாடு

செவ்வாய், 13 ஜூலை, 2010

எருமை - கழுதை - குதிரை..!!!

குருவிடம் சிஷ்யன் சொன்னான்.

"தவசீலரே.. வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறேன். ஆனால் என்னைச் சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நான் என்ன செய்யட்டும்?"
"மகனே.. நீ வாழ்வில் என்னவாக இருக்க விரும்புகிறாய்? எருமையாகவா, கழுதையாகவா இல்லை குதிரையாகவா?" குரு கேட்டார்.
"புரியவில்லை குருவே.."

"எருமையின் பின்னால் தட்டினால் என்ன செய்யும்?"

"எதையும் கண்டு கொள்ளாது தன் வேலையைப் பார்க்கும்.."

"கழுதையைப் பின்னால் தட்டினால்?"

"தட்டியவரை எட்டி உதைக்கும்.."
"ஆனால் குதிரை..?"

"முன்னால் பாய்ந்து செல்லும்.."

"புரிந்ததா.. நம் மீது பிறர் கூறும் அவதூறுகளைக் கூட நம் வாழ்வின் முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும்.. இதுதான் வாழ்வின் ரகசியம்.."

சிஷ்யன் சந்தோஷமாகத் திரும்பிச் சென்றான்.
***************
பானை செய்து விற்கும் குயவன் அவன். கடவுள் மீது அபார நம்பிக்கை கொண்டவன். அதிகாலையில் எழுந்து தான் செய்த பானைகளை ஒரு வண்டியில் அடுக்கி சந்தைக்கு கொண்டு சென்று விற்பான். அவனுடைய அன்றாடத் தேவைகளை அந்தப் பணத்தைக் கொண்டு பூர்த்தி செய்து கொள்வது அவனுடைய வழக்கமாக இருந்தது.
அன்றைக்கும் எப்போதும் போல பானைகளை வண்டியில் எடுத்துக் கொண்டு சந்தைக்கு கிளம்பினான். ஆனால் வண்டி வழியில் இருந்த சேறு நிறைந்த பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. அவன் கவலைப்படாமல் ஓரமாகப் போய் அமர்ந்து கொண்டான். எக்காரணம் கொண்டும் கடவுள் தன்னைக் கை விட மாட்டார், வண்டியை வெளியே எடுக்க உதவுவார் என்ற நம்பிக்கை.
வழியில் செல்வோர் எல்லாம் அவனை என்னவென்று விசாரித்தனர். நான் பார்த்துக் கொள்கிறேன், கவலை வேண்டாம் என்று எல்லோரையும் அனுப்பி விட்டான். நேரம் சென்றது. மாலை வேளை நெருங்கியவுடன் இருட்டத் தொடங்கியது. இப்போதுதான் முதல் முறையாக குயவனுக்கு பயம் தோன்றியது.
பானைகள் எதையுமே விற்காவிட்டால் இன்றைய பொழுதை எப்படிக் கழிப்பது? அழத் தொடங்கினான். அழுகை சிறிது நேரத்தில் கோபமாய் மாற கடவுளை திட்டத் தொடங்கினான். உன்னை நம்பினேனே, என்னை இப்படி மோசம் செய்து விட்டாயே என்றெல்லாம் புலம்பத் தொடங்கினான்.
சட்டென்று அவன் முன்னே கடவுள் தோன்றினார். பளாரென்று ஒரு அறை. குயவனுக்கு பொறி கலங்கிப் போனது.

"காலை முதல் கடவுள் காப்பாற்றுவார் எனச் சொல்லி சும்மாவே இருந்தாயே? அந்நேரத்திற்கு பள்ளத்தில் இறங்கி வண்டிச் சக்கரத்தைக் கொஞ்சமாவது நகட்ட முயற்சி செய்து இருந்தால் இந்நேரம் நான் உனக்கு உதவி இருப்பேன்... முதலில் உன்னை நீ நம்பி முயற்சி செய்.. வாழ்வில் தன்னம்பிக்கை தான் முக்கியம்.."

குயவன் புரிந்து கொண்டவனாக சந்தைக்கு கிளம்பினான்.
***************
பெண் ஒருவள் தன் காதலனுடன் கொண்ட உறவால் கர்ப்பமாகிப் போனாள். வீட்டில் இருந்தவர்கள் விவரம் தெரிந்து யார் காரணமெனக் கேட்டபோது அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பயத்தில் தன் வீட்டின் அருகில் இருந்த துறவியின் பெயரைச் சொல்லி விட்டாள். கோபம் கொண்ட உறவினர்கள் துறவியிடம் சென்று தாறுமாறாக சத்தம் போட்டனர்.
பொறுமையாகக் கேட்ட துறவி சொன்னார்..

"அப்படியா..?"

குழந்தை பிறந்தவுடன் அதை ஆசிரமத்தில் கொண்டு வந்து விட்டார்கள். துறவி அந்தக் குழந்தையை சீராட்டி வளர்க்கத் தொடங்கினார். கொஞ்ச காலம் கழித்து அந்தப்பெண்ணின் காதலன் திரும்பி வந்து தன் தவறை ஒத்துக் கொண்டான்.
துறவியை தவறாகப் பேசியதை எண்ணி ஊர் மக்களும் வருத்தம் கொண்டனர். அவரிடம் சென்று நடந்த விஷயங்களைக் கூறி மன்னிப்பு கேட்டுவிட்டு குழந்தையை தந்து விட சொன்னார்கள். சம்மதம் சொன்ன துறவியிடம் குழந்தையின் தந்தை யாரென அவர்கள் சொன்னார்கள்.
அதற்கும் துறவி சொன்னது..

"அப்படியா..?

நான் செத்த பிறகு வா..!!!

அந்த ஊரிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற முனிவர் அவர். அவரை பார்க்க அரசன் ஒருவன் வந்திருந்தான்.

"முனிவரே, நான் இந்த நாட்டின் அரசன். நான் சொல்லும் வேலைகளை செய்ய ஆயிரம் பேர் இருக்கிறார்கள். நான் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனாலும் எனக்கு மனதில் நிம்மதி இல்லை. நான் ஞானம் பெற வழி சொல்லுங்கள்" என்றான்.

முனிவர் அவனை உற்று நோக்கி விட்டு சொன்னார். " மன்னா, நான் செத்த பிறகு வா.."

மன்னனுக்கு கடுமையான கோபம் வந்து விட்டது. "நாம் இந்த நாட்டின் அரசன்.. நம்மை ஒரு சாதாரணமான முனிவர் மதிக்காமல் பேசுவதா.." ஆனாலும் அவனால் முனிவரை ஒன்றும் சொல்ல முடியவில்லை. ஏதும் பேசாமல் திரும்பி சென்று விட்டான். இரவு முழுவதும் அவனால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. மறுநாள் எழுந்து கோபம் தணிந்தவனாக முனிவரை சென்று பார்த்தான்.

"தவசீலரே.. தாங்கள் சொன்னதன் அர்த்தம் எனக்கு புரிய வில்லை.. நான் செத்த பிறகு வா என்று சொன்னீர்களே.... தாங்கள் இறந்து விட்டால் எனக்கு எப்படி அறிவை போதிக்க முடியும்.. தயவு செய்து விளக்குங்கள்" என்று பொறுமையாக கேட்டான்.

"மன்னா.. நேற்று நீ பேசும்போது உனக்கு நான் இந்த நாட்டின் அரசன் என்னும் அஹங்காரம் அதிகமாக இருந்தது. எனவே தான் நான் என்னும் உன்னுடைய மமதை அழிந்த பிறகு வா என்று சொன்னேன்.." என்றார் முனிவர். அரசன் தன் தவறை உணர்ந்து கொண்டான். நான் என்பதை துறந்து ஞானம் அடைந்தான்.

***********

குருவின் நெருங்கிய சிஷ்யன் அவன். ஒரு நாள் அவனுக்கு பெரிய சந்தேகம் வந்தது. "நான் பெரிய அறிவாளி ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?". நேராக போய் குருவிடம் கேட்டான். குரு ஒன்றும் சொல்ல வில்லை. அருகிலும் இருக்கும் கோப்பையையும் தண்ணீர் கூஜாவையும் கொண்டு வர சொன்னார். இப்போது தண்ணீரை கோப்பையில் ஊற்ற தொடங்கினார். சற்று நேரத்தில் கோப்பை நிரம்பி வழிய தொடங்கியது. சிஷ்யனுக்கு ஒன்றும் புரியவில்லை.

"இதற்கும் நான் கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம் குருவே..."

முனிவர் சிரித்து கொண்டே சொன்னார்." கோப்பையில் ஒன்றும் இல்லாதவரை அது நிரம்பும். எப்போது அது நிரம்பி விட்டதோ, அதன் பின்னர் அதில் ஊற்றிய நீரெல்லாம் வீணாய் தான் போனது. அதே போல, நீ என்று வரை உனது உள்ளத்தை எந்த களங்கமும் இல்லாமல் வெறுமையாய் வைத்து இருக்கிறாயோ, அன்று வரை நீ வாழ்வில் நிறைய கற்று கொள்ளலாம். எனக்கு எல்லாம் தெரியும் என்று நீ எண்ணினால், அதன் பின்னர் வெளியே வழிந்தோடும் நீர் போல உனக்குள் எதையும் செலுத்த முடியாது. இது தான் நீ கேட்ட கேள்விக்கான பதில்". சிஷ்யன் மனமும் தெளிவு அடைந்தது.

************

சமீபத்தில் ரசித்தது...


அமெரிக்க சிறுவன் ஒருவனுக்கு பயங்கர பணகஷ்டம். அவனுக்கு ஒரு அம்பது டாலர் தேவைப்பட்டது. கடவுளிடம் வெகு நாளாக வேண்டி பார்த்தான். ஒண்ணும் வேலைக்கு ஆகவில்லை. கடைசியாக பணம் தர வேண்டி கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். உறையின் மேல் கடவுள், அமெரிக்கா என்று எழுதி தபாலில் சேர்த்து விட்டான். பட்டுவாடா பண்ண வேண்டிய தபால் அதிகாரிகள் இந்த கடிதத்தை பார்த்து ஆச்சரியபட்டார்கள். ஒரு விளையாட்டாக அதை வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைத்தார்கள். புஷுக்கு ஒரே ஆச்சர்யம். "சரி.. இந்த பையனுக்கு உதவுவோம். ஆனால் ஒரு சிறு பையனுக்கு அம்பது டாலர் எல்லாம் அதிகம். எனவே இருபது டாலர் மட்டும் அனுப்புவோம்" என்று அனுப்பி வைத்தார்.

பணம் கிடைத்தவுடன் பையனுக்கு குஷி தாளவில்லை. நன்றி தெரிவித்து கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். "ரொம்ப நன்றி கடவுளே.. நான் கேட்ட மாதிரி பணம் அனுப்பி வச்சுட்டீங்க.. ஆனாலும்.. நீங்க அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஆபீஸ் மூலமா பணம் அனுப்புனத நான் கவர பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்.. தயவு செஞ்சு இனிமேல் அப்படி அனுப்பாதீங்க.. நீங்க அனுப்புன காசுல பாதிய அந்த புஷ் கம்முனாட்டி திருடிட்டான்.."

இத எங்க போய் சொல்ல...!!

சொர்க்கமும் நரகமும்..!!!

அவன் அந்த ஊர்லையே பெரிய போர்ப்படைத் தளபதி. தன்னோட ஊருக்கு புதுசா ஒரு சாமியார் வந்திருக்கார்னு கேள்விப்பட்டு அவரை பார்க்குறதுக்குப் போனான். ஒரு ஆலமரத்துக்கு அடியில சாமியார் ஜம்முன்னு உக்கார்ந்து இருந்தார். சுத்தி நிறைய மக்கள் கூட்டம். தளபதி மரியாதைக்கு ஒரு வணக்கத்தைப் போட்டுட்டு தன்னோட சந்தேகத்தைக் கேட்டாரு.

"ஐயா.. சொர்க்கமும் நரகமும் உண்மையிலேயே உலகத்துல இருக்குதா?"

"நீ என்னப்பா தொழில் பண்ற?" சாமியார் திருப்பிக் கேட்டாரு.

என்னடா இது.. நாம ஒண்ணு கேட்டா சாமியாரு நம்மள சம்பந்தமே இல்லாம வேற எதையோ கேக்குறாருன்னு தளபதிக்குக் குழப்பம்.

"நான் ஒரு படைத்தளபதிங்க.."

"உன்னைய எல்லாம் எவன்யா தளபதின்னு நம்புவான்.. ஆளு பார்க்க ஆடு திருடுறவன் மாதிரி இருக்க.. ஹே ஹே ஹே.."

"யாரைப் பார்த்து என்னய்யா சொன்ன.. இப்பவே உன்ன வெட்டிக் கூறு போடுறேன் பாரு.." உறுமினான் தளபதி.

"அதேதான்.. நீ கேட்டில.. நரகத்தின் கதவு.. அது இப்போ இங்கே உனக்காகத் தொறந்து கிடக்கு.." அமைதியாக சாமியார் சொன்னார்.

தளபதிக்கு தன்னோட ஆத்திரம் தப்புன்னு புரிஞ்சது. சட்டுன்னு சாமியார் கால்ல விழுந்துட்டான்.

"ஐயா.. புரிஞ்சுக்கிட்டேன்.. மன்னிச்சுடுங்க.. என்னோட அகந்தைல கண்ணு மண்ணு தெரியாம பேசிட்டேன்.."

"நல்லது.. இப்போ உனக்காக சொர்க்கத்தின் வாசல் தெரிஞ்சிருக்குமே.."

ஒரு கணம் தோன்றி மறையும் எண்ணத்தில்தான் நன்மையையும் தீமையும் உறைந்திருக்கின்றன.

***************

நாலு சாமியாருங்க சேர்ந்து ஒரு சத்தியம் பண்ணுனாங்க. "ஏழு நாளைக்கு ஒண்ணுமே பேசாம தியானம் பண்ணனும். ஒரு வார்த்தை கூட பேசக் கூடாது.." அப்படின்னு. சொன்ன மாதிரி ஒரு தனி அறைல வெறும் மெழுகுவர்த்திகள மட்டும் ஏத்தி வச்சுட்டு தியானத்துல உக்கார்ந்தாச்சு.

மொத நாள் முடியப் போற சமயம்.. பயங்கர காத்துக்கு மெழுகுவர்த்தி எல்லாம் படபடன்னு எரிய ஆரம்பிச்சது.

"அய்யய்யோ.. மெழுகுதிரி அணைஞ்சிடும் போல இருக்கே.." ஒருத்தர் பொலம்ப ஆரம்பிச்சுட்டார்.

உடனே இன்னொருத்தர் கோபத்தோட சொன்னாரு.." மறந்துட்டியா? நாம இப்ப பேசக்கூடாது.."

அடுத்தவரு.. "ஏன் இப்படி பேசிக்கிட்டு இருக்கீங்க"ன்னு மூஞ்சிய சுழிச்சாரு.

கடைசி ஆளு மட்டும் சும்மா இருப்பாரா? "ஹா ஹா ஹா.. அப்பாடா.. நான் மட்டும்தான் கடைசி வரைக்கும் எதுவுமே பேசல"

அடுத்தவர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டும்போது, எப்போதுமே அந்தத் தவறை நாமும் செய்யக்கூடும் என்பதை நாம் மறந்து விடுகிறோம்.

***************

கண்பார்வையில்லாத ஒருத்தன் தன்னோட நண்பனோட ஊருக்குப் போயிருந்தான். கொஞ்சம் நேரம் கழிச்சு மறுபடி ஊருக்குக் கிளம்பும்போது, நண்பன் அவன்கிட்ட ஒரு லாந்தர் விளக்கக் கொடுத்து, அதை எடுத்துட்டுப் போகும்படி சொன்னான்.

கண்ணு இல்லாதவன் சிரிச்சுக்கிட்டே சொன்னான்.. "எனக்கு வெளிச்சமும் இருட்டும் ஒண்ணுதானே நண்பா.. எனக்கு எதுக்கு இது?"

"அப்பு.. அது எங்களுக்கும் தெரியும்.. ஆனா இது இல்லாம நீ இருட்டுல போறேன்னு வையி.. வழியில வர யாராவது உம்மேல மோதிட்டா? அதுக்குத்தான்" அப்படின்னு சொல்லி விளக்கக் கொடுத்து விட்டான் நண்பன்.

சமாதானமா லாந்தர் விளக்க வாங்கி, அதை தனக்கு முன்னாடி தூக்கி பிடிச்சுக்கிட்டு கிளம்பினான் அந்தப் பார்வை இல்லாதவன். சித்த தூரத்துலையே எதிர்த்தாப்பிடி வந்த ஒருத்தன் மேல மோதிட்டான். அவனுக்கு பயங்கர கோபம்.

"என்னய்யா ஆளு நீ? மூஞ்சிக்கு முன்னாடி ஒரு விளக்கு எரியறது கூடவா உனக்கு தெரியாது?"

"தம்பி.. உங்க விளக்கு அணைஞ்சு ரொம்ப நேரம் ஆகிடுச்சு போல.." அமைதியா சொல்லிட்டு எதிர்ல வந்தவன் போய்ட்டான்.

மற்றவர்களுக்கு ஞானம் அளிக்க அடுத்தவரின் கருத்துக்களைப் பயன்படுத்துவது, கண்பார்வையற்றவன் கைவிளக்கேந்திப் போனது போலத்தான்.. வழியில் விளக்கு அணைந்து போகலாம். அது ஒருபோதும் தெரியாது.

***************

யூமா வாசுகியின் மஞ்சள் வெயில் புத்தகத்தை வாங்குவதற்காக "அகல்" பதிப்பகத்தை தேடிக் கண்டுபிடித்துப் போயிருந்தேன். சென்னையில் எளிதில் கண்டுபிடிக்க முடியாத ஒரு குட்டி காம்பவுண்டுக்குள் ஒரு சின்ன வீடு. அதுதான் வீடு. அதுதான் அலுவலகம். நான்கைந்து புத்தகங்கள் சேர்த்து வாங்கினேன். பதிப்பக உரிமையாளர் நான் மதுரையில் இருந்து வருவதைக் கேட்டு ரொம்ப சந்தோஷப்பட்டார். நான் வாங்கிய புத்தகங்களோடு பரிசாக "ஜென் கதைகள்" என்ற புத்தகத்தையும் அன்பளிப்பாகத் தந்தார். நான் எவ்வளவோ வற்புறுத்தியும் அதற்கான பணத்தை வாங்கிக் கொள்ள மறுத்து விட்டார். "அவ்ளோ தூரத்துல இருந்து புத்தகம் வாங்க வந்திருக்கீங்க.. உங்களுக்கு இது கூட செய்யலைன்னா எப்படி?" அத்தனை கஷ்டத்துக்கு நடுவிலும் புத்தகங்களை, வாசகர்களை நேசிக்கும் இது போன்ற மக்கள் இருக்கும்போது இலக்கியம் கண்டிப்பாக வாழும் என்றே நம்ப முடிகிறது.

அதி விவேக பூரண குருவும் ஒன்பது சீடர்களும்

அதி விவேக பூரண குருவுக்கு ஏழரை பிடித்ததோ, எட்டரை பிடித்ததோ… அவர் சென்று அமர்ந்த இடம் அவரைச் சிறப்பிப்பதாக இல்லை. தெற்கில் தொடர்ந்தும் நிலை கொள்வதற்கு விரும்பாத அதி விவேக பூரண குரு வடக்கே சென்று ஆட்சி பீடத்தில் அமரவே விரும்பினார். அதுவும் அவருக்கு சிக்கல் நிறைந்ததாகவே போய்விட்டது.
அதி விவேக பூரண குரு வடக்கே செல்வதற்குப் பல ஆறுகளைக் கடக்க வேண்டியதாக இருந்தது. அந்தப் பாதையைக் குறுக்கிடும் புலம்பெயர் ஆறுகள் கோப வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடியது. அதி விவேக பூரண குரு வடக்கே சென்று முடி சூட முற்படுவதற்குப் பின்னாலும், முன்னாலும் பெரும் சதிகள் இருப்பதாகப் புலம்பெயர் ஆறுகள் பொங்கிக் குதித்தன.
அதி விவேக பூரண குரு தனது ஒன்பது சீடர்களுக்கும் உடன் அழைப்பு விடுத்தார். நாடு நாடாகப் புலம் பெயர்ந்து வாழ்ந்த அந்த ஒன்பது சீடர்களும் ஒன்றாகப் பயணித்து குருவின் சன்னிதானத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே சென்ற சீடர்களில் பலருக்கு குருவின் பந்தாவும், பவித்திரமும் அதிர்ச்சியைக் கொடுத்தன. தாங்கள் காண்பது எல்லாமே உண்மைதானா? என்று தங்களை ஒவ்வெரு தரமும் கிள்ளிப் பார்த்துக் கொண்டார்கள்.
எதிரிகளின் பிடியில் சிக்கிச் சின்னாபின்னப்பட்டு, நொந்து நூலாகியிருப்பார் என்று எண்ணிச் சென்ற சீடர்களில் சிலருக்கு குருவின் ஆடம்பர வாழ்வு நம்ப முடியாததாக இருந்தது. எதிரி நாட்டு மன்னரது பாசத்திற்குரிய இளவரசர்களுடன் குரு கிட்டி அடித்து விளையாடிக்கொண்டிருந்தார். நவீன யுகம் என்பதால், தண்டமும் கமண்டலமும் ஏந்திய குருவின் கரங்களில் கைபேசிகள் கிணு கிணுத்தன. உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் இருந்து அவரது சீடர்கள் அவரது உத்தரவுகளைக் கேட்டுப் பெற்றுக்கொண்டனர்.
”குருவே! எப்படி… உங்களால் மட்டும் எப்படி இந்த அதிசயங்களை நிகழ்த்த முடிந்தது…?” என்று ஆச்சர்யமாகக் கெட்டார்கள்.
”எதிரி நாட்டு ஒற்றர் தலைவன் என்னுடைய நெருங்கிய நண்பன்… 2006 முதலே அவர் என்னுடைய சீடர் ஆகிவிட்டர். அவர் மூலமாக… நான் இளவரசர்களுடனும் நட்பை ஏற்படுத்திக் கொண்டேன்…” என்றார் பெருமையாக.
விக்கித்து நின்ற சீடர்களை அழைத்துக்கொண்டு நகர் வலம் வந்தார் அதி விவேக பூரண குரு. அதற்கான அத்தனை ஒழுங்குகளையும் எதிரி நாட்டு இளவரசர் ஏற்படுத்திக் கொடுத்தார்.
சீடர்களுடன் அதி விவேக பூரண குரு நடத்திய தேனீர் விருந்தில் எதிரி நாட்டு இளவரசரும், ஒற்றர் படைத் தலைவனும், மந்திரி பிரதானிகளும் கலந்து கொண்டனர். வடக்கே குரு முடி சூடுவதில் தங்களுக்குள்ள விருப்பங்களையும் அவர்கள் தெரிவித்தனர். அவர்களது இந்தத் திட்டத்தில் ஏதோ சதி இருப்பதாகச் சீடர்களில் சிலர் அச்சப்பட்டாலும், அங்கு அவர்களால் எதுவும் பேச முடியவில்லை.
புலம்பெயர் ஆறுகளைக் கடப்பதற்கு ஆவன செய்யுமாறு சீடர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆறுகள் உறங்கும் நேரம் பார்த்து, ஆற்றைக் கடக்கும் திட்டம் தீட்டப்பட்டது. அதைப் பரிசோதிக்க ஆளுக்கொரு கொள்ளிக் கட்டையும் வழங்கப்பட்டது.
ஆற்றங்கரையை அடைந்த சீடர்களுக்குப் பொங்கிப் பிரவகித்து ஓடும் ஆற்றைப் பார்த்ததும் அடி வயிறு கலக்கியது. குருவின் கட்டளையாச்சே… என்ற எண்ணத்துடன் கரையில் நின்றவாறே கொள்ளியை ஆற்றில் அமுக்கினார்கள். கொள்ளிக் கட்டை அதி சீற்றத்துடன் அணைந்தது. திடுக்கிட்ட சீடர்கள் குருவுக்கு கைபேசியில் அழைத்தார்கள்.
”குருவே! புல்பெயர் ஆறுகள் உறங்கவில்லை. விழிப்பாகவே இருக்கின்றன…” என்று அலறினார்கள்.
நம்பிக்கை தளராத குரு ”மீண்டும் முயற்சி செய்யுங்கள். ஆனால்…, நம் முன்னோர்கள் செய்தது போல் அணைந்த கொள்ளிக் கட்டையுடன் சென்று ஏமாந்து விடாதீர்கள்… கொள்ளிக்கட்டையை மீண்டும் எரிய வைத்தே கொண்டு செல்லுங்கள். அப்போதுதான் ஆறு உறங்குகிறதா? விழிப்பாக இருக்கிறதா? என்று பார்க்க முடியும்.” என்று கட்டளையிட்டார்.
குருவின் முட்டாள்த்தனத்தையும், பேராசையையும் புரிந்து கொண்ட ஒரு சீடன் கொள்ளிக்கட்டையை எறிந்துவிட்டுச் செல்ல, மீதி எட்டு முட்டாள் சீடர்களும் மீண்டும் கொள்ளிக் கட்டையை எரிய வைத்தவாறு ஆற்றை நோக்கி நடந்தார்கள்.

’ஆறு உறங்கிவிட்டதா…, இல்லை விழிப்பாகவே இருக்கிறதா…, என்று அறிய உங்களுக்கு ஆவலாக இருக்கிறதா? அவர்களிடமே நீங்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்கலாம்.


தமிழ் கதிரில் பிரசுரிக்கப்பட்டவை

திங்கள், 12 ஜூலை, 2010

குற்றம் கண்டுபிடிக்கும் குணம்

எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் குணம் நம்மில் பலருக்கு இருக்கிறது.
அடுத்தவர் செய்யும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் அப்படியொரு அலாதியான
சந்தோஷம். இப்படிக் குற்றம் கண்டுபிடிப்பதையே வழக்கமாக வைத்துக்
கொண்டிருந்தால் நாளடைவில் அது போதை வஸ்து மாதிரி ஆகி, நமது அறிவுப்
பார்வையை குறுகலாக்கிவிடும். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பைனான்ஸ் மானேஜர் ஒருவர் நடந்து
போய்க் கொண்டிருந்தபோது திறந்திருந்த டிரெயினேஜ் பள்ளத்துக்குள்
விழுந்துவிட்டார். குடலைப் புரட்டி எடுக்கும் சாக்கடை நீரில் கழுத்துவரை மூழ்கிய நிலையில் அவர் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பக்கமாக அவரது அலுவலகத்தில் பணிபுரியும் மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் வந்தார்.
பைனான்ஸ் மானேஜர்னா கணக்கைத் தவிர வேற எந்த விஷயமும் தெரியாதுனு சொல்வாங்க. அதுக்காகக் கண்ணுகூடவா தெரியாது? என்று மானேஜர் மீதிருந்த தனது காழ்ப்பு உணர்ச்சியைக் கொட்டிவிட்டு, நடையைக் கட்டினார் அவர்.
அடுத்ததாக மானேஜரின் பக்கத்து வீட்டுக்காரர் வந்தார். என்ன சார்… இந்தப்
பள்ளத்துக்கு முன்னால கொட்டையா சிவப்பு எழுத்தில் ‘ஜாக்கிரதை’னு பலகை
வெச்சிருக்கே! அதைப் பார்க்கலையா? ஹும்… நீங்கள்லாம் மானேஜர் உத்தியோகம்
பார்த்து என்னத்தைப் பெரிசா கிழிக்கப் போறீங்களோ? என்று சலித்துக்கொண்டே
ஒரு கையால் தன் மூக்கை மூடிக்கொண்டு, இன்னொரு கையை சாக்கடைப்
பள்ளத்தில் கிடக்கும் மானேஜரை நோக்கி நீட்டினார்.
ஆனால், மானேஜரைத் தொட முடியாத அளவுக்கு அந்தப் பள்ளம் மிகவும் ஆழமாக இருந்தது. வேறு வழியின்றி அவரும் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார்.
அடுத்ததாக, அந்தப் பக்கம் மானேஜரின் நெடுநாளைய நண்பர் வந்தார். கழிவுநீர்ப்
பள்ளத்தில் மானேஜர் விழுந்து கிடப்பதைப் பார்த்து பதைபதைத்த அவர், தனது
சட்டையைக்கூடக் கழற்றாமல் அந்தச் சாக்கடைக்குள் குதித்தார். இந்தா, என்
தோள்மீது ஏறி, முதலில் நீ வெளியே போ! என்று மானேஜரை அந்தச்
சாக்கடையிலிருந்து வெளியேற்றினார்.
இந்தக் கதையில் வரும் மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் மாதிரியோ அல்லது பக்கத்து வீட்டுக்காரர் மாதிரியோ, அடுத்தவர்களிடம் குறை காணும் நபர்களாகத்தான் நம்மில் பலர் இருக்கிறோம் என்பது கசப்பான உண்மை.
கணவனும் மனைவியும் ஒருவர்மீது ஒருவர் குறை கண்டுபிடிக்காமல் வாழவேண்டும். தன் மனைவி குறையே இல்லாத முழுமையான மனைவியாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்காதவர் யாரோ, அவர்தான் உண்மையில் குறையே இல்லாத முழுமையான கணவன்.
என்ன சுவாமி சொல்கிறீர்கள்? என் வீட்டுக்கு வந்து பாருங்கள். கட்டில், நாற்காலி,
சோபா, தையல் மெஷின் என்று எல்லா இடத்திலும் அழுக்குத் துணியாக இறைத்து வைத்திருக்கிறாள். ஒரு வாரத்துக்கு முன்னால் வைத்த வத்தல் குழம்பு, இரண்டு வாரத்துக்குமுன் வைத்த ரசம் என்று பிரிஜ்ஜே நாறிக் கொண்டிருக்கிறது. இந்தக் குற்றங்களை எல்லாம் அவளுக்கு நான் எடுத்துச் சொல்லக்கூடாதா? என்று சிலர் கேட்கக்கூடும்.
தாராளமாகச் சொல்லுங்கள். ஆனால், அதற்குமுன் மிகச் சிறந்த புத்திமதி எது
என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஆயிரம் வார்த்தைகளில் புத்திமதி
சொல்வதைவிட, முன்உதாரணமாக நாமே வாழ்ந்து காட்டுவதுதான் மிகச் சிறந்த
புத்திமதி!
நான் சொல்வதை நம்புவதற்குச் சிரமமாகஇருந்தால், இந்த விளையாட்டை உங்கள் குழந்தையிடம் விளையாடிப் பாருங்கள்.
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு… என்று வரிசையாகச்
சொல்வேன். நான் ஏழு என்று சொல்லும்போது நீ கைதட்ட வேண்டும். சரியா?
என்று கேட்டுவிட்டு, ஒன்று இரண்டு, மூன்று… என எண்ணத் தொடங்குங்கள். ஆறு
என்று சொல்லும்போதே, நீங்கள் திடீரெனக் கைதட்டிப் பாருங்களேன். குழந்தையும்
சட்டென்று கை தட்டிவிடும்.
இதிலிருந்து தெரிவது என்ன?
குழந்தைகள் நாம் சொல்வதைப் பின்பற்றுவதில்லை. நாம் செய்வதைத் தான்
பின்பற்றுகின்றன. குழந்தைகள் மட்டுமில்லை, பெரியவர்களும் இப்படித்தான்.
அடுத்தவர்களுக்காக இல்லாவிட்டாலும் சுயநலமான காரணத்துக்காவது
அடுத்தவர்மீது குற்றம் காண்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
சரி சுவாமி, நம் குழந்தையே ஒரு தப்பு செய்கிறது. அல்லது அலுவலகத்தில்
நமக்குக் கீழே வேலை செய்பவர் ஒரு தப்பு செய்கிறார். அடுத்த வீட்டுக்காரன்
குப்பையை எடுத்து வந்து நம் வாசலில் கொட்டுகிறான். யாரிடமும் குற்றம்
கண்டுபிடிக்கக்கூடாது என்று அப்போதும் வாய்மூடி மௌனியாக இருந்துவிட
வேண்டியதுதானா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
ஒருவர் செய்யும் தவறுகளை, அவருக்கு உணர்த்தக்கூடாது என்று நான் சொல்ல
வரவில்லை. ஆனால், அதை அவரே ரசிக்கும்படி சுட்டிக் காட்டலாம்.
ஒரு முறை யார் அழகு என்று ஸ்ரீதேவிக்கும் மூதேவிக்கும் சர்ச்சை உண்டாகி
விட்டது. தீர்வு சொல்லும் படி இருவரும் நாரதரை அணுகினார்கள். நாரதரோ
நிஜமாகவே சிக்கலில் மாட்டிக்கொண்டு விட்டார்!
ஸ்ரீதேவியாகிய லட்சுமி தான் அழகு என்றால், மூதேவிக்குக் கோபம் வந்து தன்
வீட்டிலேயே தங்கிவிடுவாள். மூதேவிதான் அழகு என்றால், ஸ்ரீதேவி
கோபித்துகொண்டு தன் வீட்டைவிட்டு வெளியேறி விடுவாள். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த நாரதர், யோசிப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளும் விதமாக,
எங்கே… சற்று முன்னும் பின்னுமாக நடந்து காட்டுங்கள் என்றார்.
ஸ்ரீதேவியும் மூதேவியும் நாரதர் முன் கேட்வாக் நடை நடந்தார்கள். சட்டென நாரதர், “ஸ்ரீதேவி வரும்போது அழகு. மூதேவி போகும் போது அழகு!” என்று சொல்ல… இரு தேவிகளுக்குமே பூரிப்பு!
அங்கே ஜெயித்தது ஸ்ரீதேவியுமல்ல, மூதேவியுமல்ல… நாரதர்தான்!
சுவாமி சுகபோதானந்தா தொகுப்பிலிருந்து.

வெள்ளி, 9 ஜூலை, 2010

அதிகம் பொய் சொல்வது ஆணா ? பெண்ணா ?

பொய் சொல்லாத மனுஷன் வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது” ன்னு எல்லாரும் அடிச்சுச் சொல்றாங்க. அவங்க அடிக்கிற அடியைப் பாக்கும்போ நமக்கு அரிச்சந்திரன் மேலயே மைல்டா டவுட் வருது. அவரு மட்டும் எப்படி பொய்யே சொல்லாம வாழ்க்கையை ஓட்டியிருக்காரோ ?.

கொஞ்ச நேரம் உக்காந்து யோசிச்சா இந்த டயலாக் உண்மை தாங்கறது நமக்கே புரியும். காலைல எழும்பி , “ஹே.. இன்னிக்கு காபி நல்லா இருக்கு” ன்னு சொல்ற முதல் பொய்ல ஆரம்பிச்சு “அப்பப்பா…. செம டிராபிக் ” ங்கற பொய்யோட லேட்டா வீடு வந்து சேரதுக்குள்ளே எத்தனை பொய் சொல்லியிருப்போம் ? கூட்டிக் கழிச்சுப் பாத்தா சில நேரம் நமக்கே மலைப்பா இருக்கும்.

இந்த பொய்ங்கற சமாச்சாரத்தை ரெண்டு பெரிய பிரிவா பிரிக்கிறாங்க. ஒண்ணு அடுத்தவங்களுக்கு இடஞ்சல் இல்லாத பொய்கள். “வாவ்… சுடிதார் கலக்கலா இருக்குடி? எங்கே வாங்கின ?” ன்னு தோழியிடம் சொல்றதோ, “சார், உங்க ஐடியா சூப்பர்” ன்னு மேனேஜர் கிட்டே சொல்றதோ ஒரு வகை. இதெல்லாம் அடுத்தவங்க மனசு நோகக் கூடாதுன்னு சொல்றதா இருக்கலாம். அல்லது அடுத்தவங்களோட தன்னம்பிக்கையை வளர்க்கிறதுக்காக சொல்றதா இருக்கலாம். எப்படியா இருந்தாலும் இதுல டேஞ்சர் இல்லை. இதை வெள்ளைப் பொய்கள் ன்னு ஆங்கிலத்தில சொல்லுவாங்க.

இன்னொரு வகை பொய் தான் டேஞ்சர். ஒரு பொண்ணு கூட பெசண்ட் நகர் பீச்சில சுண்டல் சாப்பிட்டுட்டு, “ ஆபீஸ்ல ஆடிட், அதான் டார்லிங் லேட்” ன்னு மனைவி கிட்டே சொல்றதோ, இல்லேன்னா “ நான் தம் அடிக்கிறதே இல்லை, சே.. அந்த நாற்றமே எனக்கு உவ்வே..” என்று சொல்றதோ பெரிய பொய்கள் லிஸ்ட்ல வரும்.

எல்லோருக்குமாய் பெய்யும் மழை போல எல்லோருக்குள்ளேயும் கொஞ்சம் பொய் கலந்து தான் இருக்கு. அது இலக்கியத்தில வர செம்புலப் பெயல் நீர் போல கலந்து வரும்போ உண்மையும் பொய்யும் கண்டு பிடிக்க முடியறதில்லை. அதனால “நான் பொய் சொல்ல மாட்டேன்” ன்னு ஒருத்தர் சொன்னா, அதையும் ஒரு பொய்யா அவரோட லிஸ்ட்ல தாராளமா சேத்துக்கலாம்.

அதென்னவோ தெரியல, பெண்கள் தான் அதிகம் பொய் சொல்வாங்கன்னு ஒரு பேச்சை நம்ம ஊரில் ரொம்ப சகஜமா கேக்கலாம். இளச்சவன் தலைல மிளகா அரைக்கிறதுங்கறது இது தான். நம்ம ஊரு தான் காலங் காலமா ஆண்கள் சொல்றதுக்கு “ஆமாம்” போடற ஊராச்சே. அதனால தான் இந்த பழமொழியெல்லாம் இன்னும் கிழ மொழியாகாம வழக்கத்துல இருக்கு.

ஆனா உண்மை என்ன சொல்லுது தெரியுமா ? அதிகமா பொய் சொல்றது ஆண்கள் தானாம். அப்போ பெண்கள் ? அவங்க திறமையா பொய் சொல்லுவாங்களாம் ! அடடா ! இதுல கூட நுணுக்கமான வெற்றி பெண்களுக்குத் தானா ?

பெண்களோட பொய் ஏரியா ஷாப்பிங். இருக்கிற பணத்தையெல்லாம் ரங்கநாதன் தெருவில இறைச்சிட்டு வந்தா கூட, “ஜஸ்ட் 275 ரூபாய்க்கு ஒரு சாரி எடுத்தேன்ங்க, மேட்சிங் பிளவுள் வெறும் 23 ரூபா தான்” ன்னு அவர்கள் சொல்லும் எவரெஸ்ட் அப்படியே நம்பி விடும் அப்பாவி ஆண்கள் ஏராளம். ரொம்ப உஷாரா விலை ஸ்டிக்கரையெல்லாம் ஏழு கடல் ஏழு மலை தாண்டி பூதத்தோட காலடில போட்டு வெச்சுடுவாங்க. என்ன தான் ஊரையே புரட்டினாலும் கண்டு பிடிக்க முடியாது.

“ பொண்ணுங்க தான் அதிகம் பொய் சொல்வாங்க. நாங்க எல்லாம் அப்பாவிங்க. எவ்ளோ பொய் சொல்லி லவ் பண்ணிட்டு கடைசில என்னைத் தாடி வளர்க்க விட்டுட்டா. பொண்ணுன்னாலே பொய் தான் ” என ஆண்களும், “லவ் பண்ணும்போ என்னென்ன சொல்றாங்க ! கண்ணு அழகா இருக்குங்கறாங்க, பேச்சு பாட்டு மாதிரி இருக்குங்கறாங்க, சிரிச்சா கியூட் ன்னு சொல்றாங்க… எல்லாம் பொய், ஆணுன்னாலே பொய் தான்” என பெண்களும் மாறி மாறி சண்டை போட்டுக்கிறாங்க.

சரி நீங்க சண்டை போடாதீங்க, யார் ரொம்பப் பொய் சொல்றதுன்னு நான் சொல்றேன்னு ஒரு ஆராய்ச்சி பண்ணினாங்க லண்டன்ல. இதுக்கெல்லாமா போய் ஆராய்ச்சி பண்ணுவாங்கன்னு நீங்க கேக்கக் கூடாது. அந்த ஆராய்ச்சி முடிவு என்ன சொல்லுதுன்னா, பெண்கள் ஒரு நாளைக்கு சராசரியா மூணு பொய் சொல்றாங்களாம். ஆண்களோ ஒரு நாள் ஆறு பொய் சொல்றாங்களாம் ! இந்த ஆராய்ச்சியே பொய் ன்னு ஆண்கள் போராட்டம் நடத்தாதிருப்பார்களாக.

இந்த ஆராய்ச்சில நிறைய சுவாரஸ்யங்கள். ஆண்களும் பெண்களும் பொதுவா சொல்ற பொய் என்ன தெரியுமா ? “ எனக்கு ஒண்ணும் பிரச்சினையில்ல, நல்லா தான் இருக்கேன்” என்பது தானாம்.

“ஹே.. உன் உடம்பு இளைச்சுடுச்சு டியர். நீ குண்டாவே தெரியல “, “சாரி, செல்போன்ல சிக்னலே கிடைக்கல”, “அந்த நேரம் பாத்து என் போன் பேட்டரி டவுன் ஆயிடுச்சு”, “ஓ… மிஸ்ட் கால் ரொம்ப லேட்டாதாண்டா பாத்தேன்”, “ ரொம்ப எல்லாம் குடிக்கலம்மா, ஜஸ்ட் ஒரே ஒரு ஸ்மால்”, “ இதோ வந்துட்டே இருக்கேன்”, “ இந்த டிராபிக் படுத்துது… செம கடியா இருக்கு” இதெல்லாம் எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா ? இதெல்லாம் ஆண்கள் சகஜமா சொல்ற பொய்களாம் ! உஷார் ஆயிடுங்க அம்மணிகளே !

அப்போ பெண்களோட பொய்கள் லிஸ்ட் ? அது இல்லாமலா ? “ இது புதுசா வாங்கினதில்லீங்க, பழசு தான்”, “ சே… இது ரொம்ப மலிவா கிடைச்சுது”, “ அது எங்கே இருந்துதுன்னே எனக்குத் தெரியாது, நான் அதை தொடவே இல்லை”, “ இல்லையே, நான் அதை எறியவே இல்லையே”, “சாரி.. உங்க போன் கால் மிஸ் பண்ணிட்டேன்”,” இன்னிக்கு ரொம்ப தலை வலியா இருக்குங்க” இதெல்லாம் பெண்களோட பேவரிட் பொய் லிஸ்ட்டாம் ! ஆண்களே, இது கேட்டுக் கேட்டு பழகின வார்த்தைங்க தானே ?

குறிப்பா இந்த ரொமாண்டிக், லவ் காலத்துல பொய்களெல்லாம் நிறுத்தாம வந்துட்டே இருக்கும். வேணும்னா அனுமர் வால், திரௌபதி சேலை இப்படி ஏதாச்சும் புரண உதாரணத்தை மனசுல நினைச்சுக்கோங்க.

“இன்னிக்கு இந்த டிரஸ்ல நீ தேவதை மாதிரி இருக்கே” என அவன் கடலை போட ஆரம்பிக்கும் நிமிஷத்திலிருந்து “ நீ சிரிக்கும்போ உன் கண்ணும் சேர்ந்தே சிரிக்குது”, “ நீ இல்லேன்னா நான் இல்லே”, “உன்னைத் தவிர ஒரு பெண்ணை நான் நினைச்சுக் கூட பாக்க முடியாது” என சகட்டு மேனிக்கு உடைத்துத் தள்ளுவதில் ஏதோ ஒண்ணிரண்டைத் தவிர எல்லாமே அக்மார்க் பொய்கள் தான். ஆனால் என்ன, அந்தப் பொய் தான் அந்த நிமிஷத்துல காதலிக்கும் தேவை. அப்போ தான் வீட்டுக்குப் போற வழியிலேயே “ ஹே.. ஐ மிஸ் யூ டா”, ” ஐ லவ் யூ சோ சோ சோ சோ மச்” என்றெல்லாம் எஸ் எம் எஸ்ஸித் தள்ள முடியும் !

“பெண்கள் அன்பின் வெளிப்பாடாய் செக்ஸை அனுமதிப்பார்கள், ஆண்களோ செக்ஸுக்காக அன்பை வெளிப்படுத்துவார்கள்” என்பார் ஜேம்ஸ் டாப்சன் எனும் எழுத்தாளர். கிட்டத் தட்ட அது உண்மை என்பதை ஒரு ஆராய்ச்சி சொல்கிறது.

ஹெல்த் அண்ட் சயின்ஸ் அட்வைசரி குழு சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் பல இருட்டுப் பொய்கள் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கிற சங்கதி போல, பெண்களுடன் உறவு கொள்வதற்காக எக்கச் சக்க பொய் சொல்லியிருக்கிறோம் என ஒத்துக் கொண்ட ஆண்கள் 47 சதவீதமாம் ! அப்பாடா, எல்லா ஆண்களும் பொய் சொல்லல. என் வீட்டுக் காரர் இந்த லிஸ்ட்ல வரமாட்டார் என வீட்டம்மாக்கள் மனசைத் திடப்படுத்திக் கொள்ளலாம். ஆனா பெண்களில் இது 10 சதவீதம் தானாம் !

கல்லூரி மாணவர்கள் இந்த விஷயத்துல எப்படி என ஒரு ஆராய்ச்சி நடத்தியது வாஷிங்டன் ஸ்டேட் அமைப்பு. அங்கேயும் ஆண்கள் தான் முன்னணி. 22 சதவீதம் பேர் சக மாணவிகளை பொய் ஐஸ் மழை பொழிந்து “அந்த” விஷயத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள்.

“அந்த” ஏரியா பொய்களெல்லாம், “போன மாசம் தான் ஹெல்த் செக்கப் பண்னினேன், எனக்கு எயிட்ஸ் மாதிரி நோயெல்லாம் இல்லை”,” நான் கருத்தடை ஆபரேஷன் பண்ணியிருக்கேன்”, “ உன்னைத் தவிர வேறொருத்தியை நான் நெனைக்கவே மாட்டேன்”,” இதான் பஸ்ட் டைம்”, ” ஐ லவ் யூ சோ மச்”, “ இது லாங் லைஃப் பந்தம்”, “ இந்த டைம்ல கர்ப்பம் எல்லாம் ஆகவே ஆகாது… ஐ பிராமிஸ்” என சில்மிச மசாலா பொய்கள் ! இந்த ஏரியாவில் நடந்த பொய்களோட டீட்டெயில்ஸ் எல்லாம் கொஞ்சம் அசைவ வாசனைங்கறதனால இதோட நிறுத்திக்கறேன்.

ஏற்கனவே சொன்னது மாதிரி, பெண்களோட மெயின் பொய் ஏரியா ஷாப்பிங் தான். 75 சதவீதம் பெண்கள் எவ்ளோ பணம் செலவழிச்சோம்ங்கற உண்மையை சொல்லவே மாட்டாங்களாம். 60 சதவீதம் பெண்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்துலயாவது புருஷனை ஏமாத்தறாங்களாம். வெளிநாடுகள்ல பெண்கள் சொல்லும் பொய்ல கொடுமையான பொய் என்ன தெரியுமா ? “ எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல, குழந்தைகளும் இல்லை” ங்கறது தானாம். வீட்ல குழந்தைங்க இருக்கிற அம்மாக்கள் சொல்ற பகீர் பொய் இது !

சைக்காலஜிஸ்ட் பெல்லா டி பாலோ பொய் பற்றி சொல்ற தகவல்கள் ஆச்சரியப்படுத்துது. நேரடியா பொய் சொன்னா பல வேளைகள்ல மாட்டிப்பாங்க. அதனால பொய் பார்ட்டிங்க போன்ல தான் அதிகம் பொய் சொல்றாங்களாம். உலகத்துல சொல்லப்படற பொய்கள்ல 60 சதவீதம் பொய்களை துரோகம் பட்டியல்ல சேக்கலாமாம். 70 சதவீதம் பொய்யர்கள் சொன்ன பொய்யை திரும்பத் திரும்ப சொல்றாங்களாம். ஏழு பொய்ல ஒரு பொய் கண்டுபிடிக்கப் படுமாம் ! இப்படியெல்லாம் தன்னோட ஆய்வு முடிவுகளை சைக்காலஜி டுடே மேகசின்ல டாக்டர் பெல்லா டி பாலோ எழுதியிருக்காங்க.

பொய் பேசறவங்கள்ல 4 சதவீதம் பேர் புரபஷனல் பொய்யர்களாம். இவங்களோட பொய்யைக் கண்டுபிடிக்கறது ரொம்பக் கஷ்டம் மத்தவங்களோட பொய்யை ஈசியா கண்டு பிடிக்கலாமாம். அதெப்படி ?

பேசும்போ சாதாரணமா பேசறாரா ? இல்லே வித்தியாசமான வார்த்தையெல்லாம் யூஸ் பண்றாரா பாக்கணும். முரணா பேசறாரான்னு கவனிக்கணும்.

பேசறவங்க கிட்டே அவங்க எதிர்பார்க்காத ஒரு கேள்வியை சட்டுன்னு கேளுங்க. அதுலயே பொய்யர்களை நிலை குலைய வெச்சுடும்.

ரொம்ப சைலண்ட் பார்ட்டி ஒரு நாள் கலகலப்பா இருந்தாலோ, கலகலப்புப் பார்ட்டி ரொம்ப சைலண்டா இருந்தாலோ சம்திங் ராங். ஜோக் அடிச்சா கொஞ்சம் டியூப் லைட் மாதிரி சிரிக்கிறாரா ? ஜோக்கே சொல்லாம கூட விழுந்து விழுந்து சிரிக்கிறாரா ? பேசறதுல கொஞ்சம் செயற்கைத் தனம் இருக்கா உஷாராயிடுங்க. பொய்யா இருக்கலாம்.

“நான் நினைக்கிறேன், அப்படித் தான் இருக்கும், நான் நம்பறேன்… “ இப்படியெல்லாம் பேச்சில அடிக்கடி வந்தா கொஞ்சம் சந்தேக கேஸ் தான். அதே போல பாடி லேங்க்வேஜ் கவனிக்க வேண்டியது ரொம்ப முக்கியம். இல்லேன்னு சொல்லி ஆமான்னு தலையாட்டுவாங்க…

பொய் பார்ட்டிங்க தேவையில்லாம ரொம்ப விளக்கம் குடுப்பாங்க. “ஏங்க லேட்” ன்னு சிம்பிளா ஒரு கேள்வி கேட்டா கூட அஞ்சு நிமிஷம் ஏதாச்சும் விளக்கம் குடுத்துட்டே இருப்பாங்க.

நிறைய பேரு நினைக்கிறாங்க பொய் பேசறவங்க கண்ணைப் பாத்து பேசமாட்டாங்க, முகத்தை திருப்பிக்குவாங்கன்னு. பட், உண்மைல பொய் பேசறவங்க கண்ணை நேருக்கு நேரா பாத்து பேசுவாங்க. அவங்க சொன்னதுக்கு நீங்க எப்படி ரியாக்ஷன் கொடுக்கறீங்கன்னு பாப்பாங்க. சோ, கொஞ்சம் அந்த ஏரியாவிலயும் கவனம் செலுத்தணும். இப்படி கொஞ்சம் கவனமா இருந்தா பொய் பேசறதைக் கண்டு பிடிக்கலாம்.

சுவாரஸ்யமான பொய்கள் அழகு தான். கவிதைக்குப் பொய் அழகுன்னு சொல்றதைப் போல. இலக்கியத்துல வர தற்குறிப்பேற்ற அணியே ஒரு வகையில் பொய் பேசற சமாச்சாரம் தானே ! ஆனா அது இன்னொரு நபரைப் பாதிக்கற அளவுக்கு இருந்தா பொய் பேசறது ரொம்பவே தப்பாயிடும். “பொய்மையும் வாய்மையிடத்து” ங்கறதை தப்பா புரிஞ்சுக்காம இருந்தா சரி !

நன்றி : பெண்ணே நீ !